பாஜகவுக்கு தாவுகிறாரா திமுக முன்னாள் நிர்வாகி…? திடீரென போட்ட முகநூல் பதிவால் ஆதரவாளர்களிடையே பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan22 October 2022, 5:48 pm
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நேரு குடும்பத்தினரான ராகுல் காந்தி, சோனியா காந்தி போட்டியிட விரும்பவில்லை. இதனால், சசிதரூர் – மல்லிகார்ஜுன கார்கே இடையே மோதல் ஏற்பட்டது. இந்தத் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்தும், கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே பற்றியும் திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணியாக உள்ள நிலையில், திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் இப்படி பேசியது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, திமுக செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணனை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

இந்த நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் தாகூரின் `கீதாஞ்சலி’யில் உள்ள வரிகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். அதில், நண்பர்களே, நான் பிரியப்போகும் இந்த நேரத்தில் என்னை வாழ்த்தி அனுப்புங்கள். வானத்தின்வைகறையின் ஒளி செறிந்து விளங்குகிறது. எனது பாதையும் அழகைப் பொழிகிறது. நான் என்னுடன் என்னகொண்டு போகிறேன் என்று கேட்காதீர்கள். வெறுங்கையுடன், ஆர்வ இதயத்துடன் என் யாத்திரை ஆரம்பமாகிறது. நான் எனது திருமணமாலையை அணிந்து கொள்கிறேன். எனது ஆடை பிராணியின் காஷாய உடையன்று.
பாதையில் எவ்வித அபாயங்கள் இருந்தபோதிலும் என் மனதில் எவ்விதப் பயமும் இல்லை. எனது யாத்திரை முடியும்போது அந்தி நட்சத்திரம் எட்டிப்பார்க்கும். அரசனின் அரண்மனையில் இருந்து அந்தி மாலையின் சோக கீதங்களின் இனிய கோஷம் பொழிந்து கொண்டிருக்கும். நான்இந்த வாழ்க்கையை விரும்பும்காரணத்தினாலேயே மரணத்தை நேசிக்கிறேன், என்று பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர் விரைவில் மாற்றுக் கட்சிக்கு தாவ வாய்ப்புள்ளதாகவும், அநேகமாக பாஜகவில் கூட அவர் இணையலாம் என்று கூறப்படுகிறது.