ஆண்டவனால் கூட எங்களை எதிர்க்க முடியாது… இனி பாஜக அப்படி செய்யாது : எச்சரிக்கும் செல்லூர் ராஜு

Author: Babu Lakshmanan
10 March 2023, 10:37 am

எங்கள் மீது துரும்பை வீசினாலும், நாங்கள் தூணை கொண்டு எறிவோம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- நாளை காலை 11 மணிக்கு சிவகங்கை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் எடப்பாடி பழனிசாமி, அதற்கு முன்னதாக மதுரை வந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.

இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மட்டுமே ஆலோசனை நடத்தினோம். அதிமுகவுக்கு எதிரான பாஜகவின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. தோழமை கட்சிகளுக்குள் இது சகஜமான ஒன்று.
2011 காங்கிரஸ் ஆட்சியின் போது திமுக கூட்டணியில் இருந்தும் அக்கட்சிக்கு எதிரான செயல்களை காங்கிரஸ் செய்தது. அப்போது, கூடா நட்பு கேடாக முடிந்துள்ளது என்றார் கலைஞர். பின்னர் அவர்களுடனே கூட்டணி அமைத்தார். அது போல தான் எங்களுடைய உரசல்களும். இது சகஜம் தான்.

ஜெயலலிதா உடன் ஒப்பிடுவதற்கு இங்கு யாரும் இல்லை. இனிமேல் பாஜக அதுபோன்ற செயல்களில் ஈடுபடாது. கூட்டணியை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். கூட்டணி என்பது கொள்கை சார்ந்தது அல்ல.

எங்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆண்டவனால் கூட முடியாது. திருமாவளவன் எங்களுடைய சகோதரர். அவர் மீது ஜெயலலிதா அன்பும் பாசமும் கொண்டவர். எங்கள் மீது துரும்பை வீசினாலும், நாங்கள் தூணை கொண்டு எறிவோம், எனக் கூறினார்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!