டுவிட்டர் டிரெண்டிங்கில் #GetOutRavi… சென்னையில் திமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan10 January 2023, 9:31 am
சென்னை : ஆளுநருடனான மோதல் அதிகரித்து வரும் நிலையில், டுவிட்டரில் திமுகவினருக்கு ஆதரவாக டுவிட் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து சென்னையில் திமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. ஆளுநர் உரை தொடங்கியதும், அதனை எதிர்த்து கூட்டணி கட்சிகள் கூச்சல் எழுப்பினர். அமளியில் ஈடுபட்டனர். பின்னர், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
இருப்பினும், தொடர்ந்து, உரையாற்றிய ஆளுநர் ஆர்என் ரவி, திராவிட மாடல், அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை தனது உரையில் தவிர்த்தார். இதனைக் கண்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் அவையில் இருந்து பாதியில் வெளியேறினார்.
ஆளுநரின் இந்த செயலுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், #GetOutRavi என்ற ஹேஷ்டேக்கையும் அவர்கள் டுவிட்டரில் டிரெண்டாக்கினர்.
இந்த நிலையில், ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் #GetOutRavi என்ற வாசகத்துடன் திமுக வைத்த பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ஆளுநர் – ஆளும் கட்சி மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.