அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆளுநர் சாமி தரிசனம்…எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம்: மயிலாடுதுறையில் பரபரப்பு..!!
Author: Rajesh19 April 2022, 11:33 am
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு இன்று வந்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் மற்றும் சிவாச்சாரியார்கள் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆளுநர் கோவிலுக்கு சென்று முதலில் கஜ பூஜையும், கோபூஜையும் செய்தனர். பின்னர் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காளசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சாமி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
அதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூஜைகளும் நடைப்பெற்றது. இந்நிலையில் ,அவரது வருகைக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 16 அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆதினம் நோக்கி ஆளுநர் வாகனம் செல்லும் சாலைமுன் திரண்ட நூற்றுக்கணக்கானோர் கவர்னரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதில் சற்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.