ராமாவரத்தில் சசிகலா காரை சிறைப்பிடித்த எம்ஜிஆரின் பேரன்… திடீரென வந்த மீடியேட்டர் கால் ; ஆடிப்போன சின்னம்மா குரூப்..!!
Author: Babu Lakshmanan21 October 2022, 4:18 pm
சென்னை ராமாவரத் தோட்டத்தில் சசிகலாவின் காரை எம்ஜிஆர் பேரன் சிறைப்பிடித்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட நிலையிலும், அதிமுக கொடி கட்டிய காரில் வலம் வருவதுடன், அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள லெட்டர் பேடில் அறிக்கையையும் விட்டு வருகிறார்.
அதுமட்டுமில்லாமல், சிறையில் இருந்து வந்தவுடனே, ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு வந்தார். அதன் பிறகு, எம்ஜிஆரின் பிறந்தநாள், நினைவு தினம், அதிமுக நிறுவன நாள் ஆகியவற்றின் போதெல்லாம் ராமாவரம் தோட்டத்திற்கும், காது கேளாதோர் பள்ளிக்கும் செல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு அதிமுகவின் பொன் விழா ஆண்டையொட்டி, எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு சென்றிருந்த சசிகலா, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம் என ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினருக்கு மெசேஜ் சொன்னார். ஆனால், எடப்பாடி பழனிசாமி இதனை ஏற்றுக் கொண்ட பாடில்லை.
இந்த நிலையில், அதிமுக நிறுவன ஆண்டையொட்டி, நேற்று முன் தினம் எம்ஜிஆர் காது கேளாதோர் வாய் பேச முடியாதோர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தீபாவளி பட்டாசும் இனிப்பும், புத்தாடைகளையும், தனது ஓட்டுநர், பாதுகாவலரிடம் கொடுத்து அனுப்பினார் சசிகலா.
அதன்படி, பள்ளியில் கொடுத்துவிட்டு திரும்பிய சசிகலாவின் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலரை மடக்கிய எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன், அவர்களின் கார் சாவியை பறித்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் திடுக்கிட்ட சசிகலாவின் டிரைவரும் பாதுகாவலரும் என்ன ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டனர். அப்போது, அவர் அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் சசிகலாவின் ஆதரவாளரான புகழேந்திக்கு சென்றுள்ளது. பின்னர், எம்ஜிஆரின் பேரனை போனில் தொடர்பு கொண்டு, “தம்பி என்னதான் இருந்தாலும் சின்னம்மாவின் காரை நீங்கள் இப்படி செய்யக் கூடாது. யாரோ செய்த தவறுக்கு எம்ஜிஆர் காலத்திலிருந்து இருக்கும் சின்னம்மாவை அவமானப்படுத்துவது சரியல்ல” என பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், இரவு 10 மணிக்கு மேல் கார் சாவியை டிரைவரிடம் ராமசந்திரன் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சசிகலா கடும் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், எதற்காக இதுபோன்று அவர் நடந்து கொண்டார் என்று ஆதரவாளர்களிடம் கேட்டுள்ளார். அப்போது, முன்பு ஒரு பிரியாணி பிரச்சனையில் எம்ஜிஆர் பேரனுக்கும், சசிகலா ஆதரவாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனால், ஆடிப்போன சசிகலா, தனது ஆதரவாளர்களை கண்டித்துள்ளார். ஏற்கனவே, அதிமுகவில் இணைய முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், எம்ஜிஆர் பேரனையும் பகைத்துக் கொள்வதா..? என்ற எண்ணம் அவரிடம் எழுந்திருக்கும் என்று கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.