சமஸ்கிருதத்தை விட தமிழ்தான் பழமையானது : தமிழுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இந்தி பிரபலம்…!!
Author: Babu Lakshmanan4 May 2022, 2:02 pm
இந்தியாவில் மொழி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தி பிரபலம் ஒன்று தமிழ் மொழிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி பற்றிய பேச்சுக்கு பிறகு, தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மொழி குறித்து விவாதம் எழுந்துள்ளது. கன்னட நடிகர் கிச்சா சுதீப், இந்தி நடிகர் அஜய் தேவ்கன் இடையேயான மொழிச்சண்டை பெரிய பிரளயத்தையே உண்டாக்கியது.
இதனிடையே, இந்தி நடிகை கங்கனா ரணாவத், சமஸ்கிருத மொழிதான் மிகவும் பழமையானது என்று கூறி, புதிய குண்டை தூக்கி போட்டார். அவரது இந்தக் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, பல்வேறு பிரபலங்கள் அவரவர் மொழி குறித்து சாதகமாக பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், சமஸ்கிருதத்தை விட தமிழ்தான் பழமையானது என்று இந்தி பின்னணி பாடகர் சோனு நிகம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது :- நாட்டில் அதிகம் பேசப்படும் மொழியாக ஹிந்தி இருக்கலாம். ஆனால், அது நம் தேசிய மொழி என, அரசியலமைப்பில் எங்குமே குறிப்பு இல்லை. இந்தியாவுக்கு தேசிய மொழி கிடையாது. இந்தி, ஆங்கிலம் இரண்டும் அலுவல் மொழிகள். தமிழ் தான் உலகின் மிக பழமையான மொழி என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
உலகின் பழமையான மொழி சமஸ்கிருதம் என, ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர். ஆனால், தமிழ் அதைவிட பழமையானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தி பேசாதவர்களிடம் இந்தி தான் தேசிய மொழி என கூறுவது நமக்குள் பிளவை ஏற்படுத்துகிறது. யாருக்கு என்ன மொழி பேச விருப்பமோ அதை பேசட்டும். எதையும் திணிக்காதீர்கள், என்று கூறினார்.
சோனு நிகமின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.