‘மானமுள்ள மனிதன் வெளிய போகத்தான் செய்வான்… தெருப்பொறுக்கி மாதிரி நடந்துக்கிட்டாங்க’ ; ஆளுநருக்கு இந்திய ராணுவ வீரர் ஆதரவு
Author: Babu Lakshmanan10 January 2023, 3:51 pm
சென்னை : தெருப்பொறுக்கி போல எம்எல்ஏக்கள் செயல்பட்டு இருப்பதாக, ஆளுநர் ஆர்என் ரவிக்கு இந்திய ராணுவ வீரர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. ஆளுநர் உரை தொடங்கியதும், அதனை எதிர்த்து கூட்டணி கட்சிகள் கூச்சல் எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். பின்னர், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
இருப்பினும், தொடர்ந்து, உரையாற்றிய ஆளுநர் ஆர்என் ரவி, திராவிட மாடல், அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை தனது உரையில் தவிர்த்தார். இதனைக் கண்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் அவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, GETOUTRAVI என்னும் ஹேஷ்டேக்கையும் திமுகவினர் டிரெண்டாக்கினர்.
மேலும், ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேவேளையில், ஆளுநருக்கு ஆதரவாக பாஜக உள்ளிட்ட கட்சிகளும் குரல் கொடுத்து வருகிறது.
இப்படியிருக்கையில், தமிழக அரசியல் நிகழ்வுகளை அடிக்கடி விமர்சிக்கும் கடலூரைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர், சட்டசபையில் நேற்று ஆளுநர் வெளிநடப்பு செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :- அனைவருக்கும் வணக்கம், என்னுடைய தமிழகம் சரியான வழியில் செல்லவில்லை. பிரிவினைவாத சக்திகளையும், மதவாத சக்திகளையும் முன்னெடுத்து சொல்கிறது என்பதை அழுத்தமாக சொல்கிறேன். துணை ராணுவம் என்பது உள்நாட்டு நக்சல்களை களையெடுப்பது தான் எங்கள் பணி. ஆனால், ஆயுதமில்லாத மவோயிஸ்ட், நக்சல்கள் தமிழகத்தில் பெருகி வருகின்றனர். அவர்களை களையெடுப்பது தான் எனது பணி.
ராணுவ வீரர் அரசியல் பேசக்கூடாது என்று சொல்கிறீங்கள். நான் அரசியல் பேச விரும்பவில்லை. இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரித்தெடுக்கும் நோக்கத்துடன் நிறைய சக்திகள் செயல்பட்டு வருகின்றன. அதைப் பற்றிதான் பேச வந்துள்ளேன்.
தமிழகத்தில் நிறைய மரபுகள் மீறப்படுகிறது. என்னுடைய முதலமைச்சர் ஒரு மதத்திற்கு வாழ்த்து சொல்கிறார். இன்னொரு மதத்திற்கு வாழ்த்து சொல்ல மறுக்கிறார். அதனால், எனது தமிழம் சரியான வளர்ச்சிப் பாதையில் செல்லவில்லை.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒருவர் உரையாடும் போது, நாகரீகமற்ற முறையில் எம்எல்ஏக்கள், மக்களுக்காக சேவை செய்வதற்கான நியமிக்கப்பட்டவர்கள், தெருப்பொறுக்கி போல கூச்சலிட்டு அவமதித்துள்ளனர். அந்த அவமானம் செய்யும் போது எப்படி உட்கார முடியும். மானமுள்ள எந்த ஒரு மனிதனமாக இருந்தாலும் வெளிநடப்பு செய்வான்.
உடனே தேசிய கீதத்தை ஆளுநர் அவமதித்து விட்டதாக கூறுகிறார்கள். யார் இதனை சொல்கிறது. 75வது சுதந்திர தினத்தின் போது தேசிய கொடியை ஏற்றமாட்டேன் சொன்ன தேச விரோதிகள் தான் இதனை சொல்கிறார்கள். தேசிய கீதம் ஒளிக்கும் போது, கைக்கட்டியும், சல்யூட் அடிக்காமலும் அமைச்சர்கள் இருந்த போது, தேசிய கீதம் அவதிக்கப்பட்டது தெரியவில்லையா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ராணுவ வீரரின் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.