பாஜகவுடனான உறவு முடிந்ததா? அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கருத்தால் அரசியலில் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan3 February 2023, 11:57 am
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி அதிமுக வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
அதேபோல், ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா? களத்தில் இருந்து விலகுமா? அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தருமா? ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கு ஆதரவு தருமா? என்பதில் தொடர்ந்து குழப்பாமான சூழ்நிலை நிலவி வந்தது.
இந்த சூழ்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு நேரில் சென்ற அண்ணாமலை பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். இந்த சந்திப்பின் போது அதிமுக தரப்பில் ஜெயக்குமார் உடன் இருந்தார்.
அதேவேளை, பாஜக தரப்பில் கரு.நாகராஜன், பாஜக மேலிடப்பொறுப்பாளர் ரவி உடன் இருந்தனர். இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. பின்னர் இபிஎஸ்சை சந்தித்த கையோடு ஓபிஎஸ்சையும் சென்று சந்தித்தார்.
இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- வட மாநிலங்களில் பாஜக தங்கள் நட்பு கட்சிகளின் ஆட்சியை எப்படி வீழ்த்தியது என்பது எங்களுக்கு தெரியும்.
பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளோம். உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜகவுடனான கூட்டணி முடிந்து விட்டது. உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜக தனித்து தான் போட்டியிட்டது என கூறினார்