இதுக்காக இளையராஜாவை விமர்சிப்பதா…? எதிர்மறை அரசியல் செய்யும் எதிர்கட்சிகள்… பொங்கிய ஜேபி நட்டா…!!
Author: Babu Lakshmanan18 April 2022, 1:19 pm
பிரதமர் மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு பேசிய இசையமைப்பாளர் இளையராஜாவை பல்வேறு தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கருத்து தெரிவித்துள்ளார்.
ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது. இந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை ஒன்றை எழுதியிருந்தார். அதாவது, பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது.

சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள். என பிரதமர் மோடியை அவர் புகழ்ந்து எழுதியிருந்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. அதேவேளையில், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இளையராஜாவின் கருத்தை வரவேற்று, ஆதரவாக கருத்துக்களை கூறி வருகின்றன.
கடும் விமர்சனங்கள் எழுந்த போதிலும், எனது சொந்தக் கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று இளையராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இளையராஜாவிற்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது :- ஒரு கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிக்கும், இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லை என்பதால் ஒரு இசை மாமேதையை கடுமையாக விமர்சிப்பது சரியானதா..? எதிர்க்கட்சிகள் சகிப்புத் தன்மை இல்லாமல் செயல்படுகின்றன.
தமிழ்நாடு,கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். இது சகிப்புத்தன்மை இல்லாத அரசியலை காட்டுகிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று இருக்கின்றன. எதிர் கட்சிகள் தேர்தல் தோல்வியின் காரணமாக ஏமாற்றமடைந்து எதிர்மறை அரசியல் செய்கின்றன. இதன் காரணமாகத்தான் இது போன்ற கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது, எனக் கூறினார்.