அண்ணாமலை பேச்சை சீரியசாக எடுத்துக்க கூடாது… பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதே இதுக்காகத் தான் ; எம்பி ஜோதிமணி பேச்சு

Author: Babu Lakshmanan
7 October 2023, 9:03 am
Quick Share

நான் மீண்டும் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்றும், அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அளித்த பேட்டியில் கூறியதாவது ;- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக 10 தலை ராவணன் என்று சித்தரித்து கூறியதை கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கிய போது, பாஜக அலுவலக பகுதிக்குள் காங்கிரஸ் கட்சியினரை செல்ல விடாமல், போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து தடுத்து நிறுத்தினர்.

இதனால், கரூர் எம்பி ஜோதிமணிக்கும், காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. பாஜக அலுவலகம் அருகே விட முடியாது என்று காவல்துறையினர் கண்டிப்பாக கூறி இருக்கிறது. அந்த இடத்திலேயே காங்கிரஸ் கட்சியினர் ஜோதிமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன், தெற்கே மாவட்ட தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புரம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரூர் எம்பி ஜோதிமணி கூறியதாவது :- ராகுல் காந்தி பாஜக ஆர்எஸ்எஸ் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார். மோடிக்கும், அதானிக்கும் உள்ள தொடர்பு குறித்து தொடர்ந்து ராகுல் காந்தி அம்பலப்படுத்தி வருகிறார். 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். அதேபோன்று 5 மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும்.

பாஜகவிடமிருந்து பல்வேறு கூட்டணி கட்சிகள் விலகி வருகிறது. குறிப்பாக, தென்னிந்தியாவில் பல கூட்டணி கட்சிகள் பாஜவிடமிருந்து பிரிந்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்து தான், பாஜக தற்போது இது போன்ற வேலைகளில் இறங்கியுள்ளது. பாஜக அறக்குறைவான வேலைகளில் இறங்கியுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் இதுபோன்ற தரக்குறைவான விமர்சனங்களை என்றைக்கும் பாஜக மீது வைத்தது கிடையாது.

நான் மீண்டும் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தான் போட்டியிடுவேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவதை எல்லாம் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள தேவையில்லை. தமிழகத்தில் பாஜகவிற்கும் நோட்டாவிற்கும் தான் போட்டி, வேறு எந்த கட்சியோடும் அல்ல. போகிற போக்கைப் பார்த்தால் இடி, ஐடி, சிபிஐ, அதானி ஆகியோருடன் மட்டும்தான் பாஜக கூட்டணி வைக்க முடியும்.

கர்நாடக தேர்தல் முடிவுக்கு பின் சிலிண்டர் விலையை 200 ரூபாய் பாஜக அரசு குறைத்துள்ளது. இன்னும் ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு பின்னர் ஆயிரம் ரூபாய் கூட மத்திய அரசு குறைக்க வாய்ப்பு உள்ளது. பாஜக, அதிமுக ஒரு கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், 39 நாடாளுமன்ற தொகுதியிலும் தமிழகத்தில் வெற்றி பெறும். அதே போன்று புதுச்சேரியிலும் ஒரு தொகுதியில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும், என்றார்.

Views: - 367

0

0