பள்ளி கழிவறையில் மாணவி தற்கொலை… சில்லாங்குளத்தில் அதிர்ச்சி சம்பவம் ; மாணவி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் விசாரணை!!
Author: Babu Lakshmanan21 September 2022, 12:58 pm
தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே சில்லாங்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் கழிவறையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை சில்லாங்குளத்தில் முத்துக்கருப்பன் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமநாதன் மகள் வைத்தீஸ்வரி என்பவர் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த நிலையில், அப்பள்ளியின் கழிவறையில் வைத்தீஸ்வரி நேற்றிரவு கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த பசுவந்தனை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், மாணவியின் மரணம் குறித்து தங்களுக்கு தெளிவான தகவல் பள்ளி நிர்வாகம் சார்பில் கொடுக்கவில்லை என்று மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மாணவியின் உறவினர்கள் மாணவி வைத்தீஸ்வரி தங்கியிருந்த படித்த சில்லாங்குளத்தில் உள்ள விடுதியை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பள்ளி நிர்வாகம் மற்றும் அன்று பணியில் இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, தாசில்தார் நிசாந்தினி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
இதனிடையே, அமைச்சர் கீதா ஜீவனும் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது, மாணவி கைப்பட எழுதிய கடிதம் சிக்கியதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.