ரத்த அணுக்களில் இருக்கும் இஸ்லாமிய வெறுப்பு அம்பலம்… பிரதமர் மோடியின் பேச்சு குறித்து வைகோ விமர்சனம்

Author: Babu Lakshmanan
24 April 2024, 1:01 pm

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து யாருக்கு தரப் போகிறீர்கள்? ஊடுருவியவர்களுக்கா? என்று தனது இஸ்லாமிய வெறுப்பை கக்கியுள்ளார் பிரதமர் மோடி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 18-வது மக்களவைத் தேர்தலில் ஏப்ரல் 19 அன்று 102 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்கட்ட தேர்தலில் தனக்குச் சாதகமான சூழல் இல்லாததை உணர்ந்த பா.ஜ.க. தற்போது நடக்கும் பிரசாரத்தில் மதக்கலவரத்தை தூண்டி வாக்கு சேகரிக்க முனைந்துள்ளது. இதன் உச்சகட்டமாக பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானில் நடைபெற்ற பிரசார பேரணியில் ஆற்றிய உரையில் தனது இஸ்லாமிய வெறுப்பை கக்கி உள்ளார்.

மேலும் படிக்க: ஸ்டாலின் செய்யாததை பிரதமர் மோடி செய்திருக்காரு… பொய்யான பிம்பத்தை உருவாக்கும் காங்கிரஸ் ; தமிழிசை சௌந்தரராஜன்!!

ஏப்ரல் 21-ம் தேதி ராஜஸ்தான் பன்ஸ்வாரா பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களின் செல்வங்களை எல்லாம் ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தை பெற்றெடுத்தவர்களுக்கும் கொடுத்து விடுவார்கள். இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நாட்டின் வளங்களைப் பயன்படுத்துவதற்கு இஸ்லாமியர்களுக்குதான் முன்னுரிமை என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் பெண்களின் நகைகள் கணக்கீடு செய்யப்பட்டு அது பகிர்ந்து அளிக்கப்படும் என்று உள்ளது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து யாருக்கு தரப் போகிறீர்கள்? ஊடுருவியவர்களுக்கா? என்று தனது இஸ்லாமிய வெறுப்பை கக்கியுள்ளார் மோடி. இஸ்லாமியர்கள் மீதான பிரதமர் மோடியின் இந்த வெறுப்பு பேச்சு உலகின் பல்வேறு நாடுகளில் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. மோடி, தேர்தல் பரப்புரையில் பேசிய முஸ்லிம்களுக்கு எதிரான விஷம் தோய்ந்த கருத்துக்களுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. தேர்தல் ஆணையத்திலும் புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் அதை எல்லாம் அலட்சியப்படுத்திய பிரதமர் மோடி, மீண்டும் தான் பேசியது சரிதான் என்று ஆணவத்துடன் கொக்கரித்து இருக்கிறார். ராஜஸ்தானின் டோங் நகரில் நேற்று ஏப்ரல் 23-ம் தேதி நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நேற்று முன்தினம் ராஜஸ்தானில் நான் சில உண்மைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தினேன். காங்கிரஸ் கட்சியானது உங்கள் சொத்துகளை எக்ஸ்ரே செய்யும் என அதன் தலைவர் கூறுகிறார். உங்களின் சொத்துகள் மற்றும் பெண்கள் அணியும் நகைகளை கணக்கெடுப்பதாகவும் அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். உங்களுக்கு இரண்டு வீடுகள் இருந்தால்கூட, அவர்கள் எக்ஸ்ரே செய்து ஒரு வீட்டைப் பறிப்பார்கள்.

இப்படியாக, மக்களின் சொத்துகளைப் பறித்து காங்கிரஸ் தனது ஸ்பெஷல் ஆட்களுக்கு விநியோகிக்க சதி செய்கிறது என்ற உண்மையை நான் வெளிப்படுத்தினேன். இதனால், ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியும் பீதியடைந்துள்ளது. அவர்களின் அரசியலை நான் அம்பலப்படுத்தியபோது, அவர்கள் என்னை திட்டும் அளவுக்கு கோபமடைந்தார்கள். எதிர்க்கட்சியினர் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள்? காங்கிரஸ் ஏன் தனது கொள்கைகளை மறைக்க விரும்புகிறது? காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலில் முழுமையாக மூழ்கியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை அளிப்பேன் எனக் கூறியது உண்மை. அந்தக் கூட்டத்தில் நானும் பங்கேற்றேன்” என்று மீண்டும் மீண்டும் தமது மதவாத கருத்துக்களைக் கொட்டியுள்ளார்.

அது மட்டுமன்றி முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பற்றியும் கேள்வி எழுப்பி உள்ளார். “கடந்த 2004-ல் ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் முதலில் செய்த விஷயங்களில் ஒன்று, ஆந்திராவில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை குறைத்து, அதை இஸ்லாமியர்களுக்கு வழங்கியதுதான். அது ஒரு சோதனை முயற்சித் திட்டம். பின்பு அதனை நாடு முழுவதும் செயல்படுத்த காங்கிரஸ் விரும்பியது. 2004 முதல் 2010-ம் ஆண்டு வரை நான்கு முறை இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் முயற்சித்தது. இவ்வாறு பிரதமர் மோடி பேசி இருப்பது அவரது சிந்தையில் நிறைந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் கோட்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

காலம் காலமாக ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா மதவெறி கும்பல் இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து, இந்துராஷ்டிரம் அமைக்க முனைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவேதான் ஆர்.எஸ்.எஸ் தொட்டிலில் வளர்ந்த நரேந்திர மோடி, நாட்டின் பிரதமர் என்ற உயர்ந்த இடத்திற்கு வந்த பிறகும் தனது ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பைக் கக்கி உள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. பிரதமரின் இந்த கீழ்த்தரமான பேச்சுக்களை தேர்தல் ஆணையம் வேண்டுமானால் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நாட்டு மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். ஆட்சி அதிகாரத்திலிருந்து பா.ஜ.க. தூக்கி எறியப்படும் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன, எனக் கூறினார்.

  • before marriage priyanka was pregnant question raised by bayilvan ranganathan திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே கர்ப்பம்; அப்பா யார்னு கேட்பாங்களே? விஜய் டிவி பிரியங்காவின் பகீர் பின்னணி