அதிமுகவை எதிர்க்க திராணி இல்லாதவர்கள்… பெரிய போராட்டம் வெடிக்கும் : தமிழக அரசை எச்சரிக்கும் ஜெயக்குமார்..!!

Author: Babu Lakshmanan
2 August 2023, 2:29 pm

சென்னையில் எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரம் பகுதியில் 1994ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை அப்போதைய அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு எம்ஜிஆர் சிலையின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சிவப்பு பெயிண்ட்டை ஊற்றி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் அப்பகுதியில் குவிந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ராயபுரம் அதிமுக பகுதி கழக செயலாளர் பழைய வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, எம்ஜிஆர் சிலையினை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். பிறகும், சிலையின் மீது இருந்த பெயிண்டினை துடைத்து விட்டு, சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- எம்.ஜி.ஆரை தெய்வமாக பார்க்கிறோம். எம்.ஜி.ஆர் மறைந்து 35 ஆண்டுகள் கடந்தும் அவர் மீது பயம் உள்ளது. அதிமுகவை எதிர்க்க திராணியற்றவர்கள், பேடிகள்.

பெயிண்ட் ஊற்றுவதால் எம்.ஜி.ஆரின் புகழை மறைக்க முடியாது. பெயிண்ட் ஊற்றிய உண்மை நபர்களை கைது செய்யவில்லை என்றால், பெரிய போராட்டம் நடத்துவோம், எனக் கூறினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ