அமைச்சர் PTR-ஐ ஓரங்கட்டுகிறாரா CM ஸ்டாலின்…? வெளியான பெயர் பட்டியல்… அதிர்ச்சியில் PTR ஆதரவாளர்கள்..!!
Author: Babu Lakshmanan8 May 2023, 9:42 am
சென்னை : ஆடியோ விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை ஓரம்கட்டும் நடவடிக்கையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டிருப்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
அண்மையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஆடியோ ஒன்றை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் இணைந்து ஒரு வருடத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாகவும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க இருவரும் முயற்சிப்பதாக கூறியிருந்தார்.

ஆனால், இந்த ஆடியோ வெளியாகி சில தினங்களுக்குப் பிறகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்தார். இருப்பினும், இந்த ஆடியோ விவகாரம் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவரது அமைச்சர் பதவி பறிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர் பழனிவேல் தியாராஜன் விளக்கமும் அளித்தார். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் சமாதானம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, பிடிஆரை ஓரங்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்த திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் சிறப்பு பேச்சாளர்களின் பெயர் பட்டியல் கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. அதில் மதுரை மாநகர் சார்பில் காமராஜபுரம் பகுதியில் ஆனந்தன், வில்லாபுரம் பகுதியில் ரகுபதி, சிம்மக்கல் பகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திருப்பரங்குன்றம் வடக்கு ஒன்றியத்தில் வாசு முத்துசாமிஸ ஜீவா நகர் பகுதியில் சரவணன், பெத்தாணியாபுரம் பகுதியில் அப்துல்காதர், அண்ணாநகர் பகுதியில் முகவை க ராமர் உள்ளிட்டோர் பங்கேற்பர் என பெயர்களும் வெளியிடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் சிம்மக்கல் பகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஜெயரஞ்சன் அந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார் என போஸ்டர்களும், நிகழ்ச்சி நிரலும் அச்சிடப்பட்டுள்ளது. பிடிஆர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் 3 நாட்களில் அவருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பழனிவேல் தியாகராஜனை முதல்வரும் அமைச்சர்களும் பெரியதாக கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் கடந்த முறை சித்திரை திருவிழாவில் பிடிஆர் கலந்து கொண்ட நிலையில் இந்த ஆண்டு அவர் வரவில்லை. தற்போது, பேச்சாளர் பட்டியலில் இருந்து பிடிஆர் நீக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட செயல்கள், திமுக தலைமை அவரை ஓரங்கட்டுகிறதா..? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.