அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க விட மாட்றாங்க… விதிகளை மீறி கைது பண்ணியிருக்காங்க ; வழக்கறிஞர் பேட்டி..!!

Author: Babu Lakshmanan
14 June 2023, 7:53 am

கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க அனுமதிக்கவில்லை என்று அவரது வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவரது தலைமை செயலகத்தின் அறையில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையை தொடர்ந்து, அவரது வீட்டின் முன்பாக துணை ராணுவப் படையினர், அதிவிரைவு படையினர் என அடுத்தடுத்து குவிக்கப்பட்டனர்.

சுமார் 17 மணிநேரம் நடந்த இந்த சோதனைக்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர். மேலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

நெஞ்சில் கைவைத்தபடி அவர் காரில் மருத்துவமனைக்கு அப்போதே அழைத்துச்செல்லப்பட்டார். இதையடுத்து, அவர் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படுவாரா, கைது நடவடிக்கையா என பரபரப்பு எழுந்தது. இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் முன்பு திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவரது வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ பேசியதாவது ;- அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. காரணம் எதுவும் சொல்லாமல் அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். உறவினர்கள், நண்பர்கள் யாரிடமும் அதிகாரிகள் எதுவும் சொல்லவில்லை.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. கைது நடவடிக்கை என்றால் அதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம், எனக் கூறினார்.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!