பெற்ற மகளை கொடூரமாக தாக்கிய தாய்; சிறுநீரகம் பழுதடைந்து சிறுமி பலி; கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Author: Sudha28 ஜூலை 2024, 12:29 மணி
கோவை தெலுங்குபாளையம் மெய்யப்பன் நகரை சேர்ந்தவர்கள் தட்சிணாமூர்த்தி, சாந்தலட்சுமி தம்பதி.இவர்களது மகள் அனுஸ்ரீ, ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மே மாதம் 17ம் தேதி கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்ததாகக் கூறி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து, தட்சிணாமூர்த்தி செல்வபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்குப் பதிந்த போலீசார் விசாரித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுமியின் உடலில், 33 காயங்கள் இருந்ததாக கூறப்பட்டிருந்தது. போலீசார் சிறுமியின் தாய் சாந்தலட்சுமியிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.இதில் அவர் மகளை அடித்து துன்புறுத்தியதே மரணத்துக்கு காரணம் என, தெரியவந்தது. அவரை போலீசார் சிறையில் அடைந்தனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் சொல்லும் போது, சிறுமி அனுஸ்ரீ நன்றாக படிக்கக் கூடியவர். இருப்பினும் சாந்தலட்சுமி மேலும் படிக்க வலியுறுத்தி, அடிக்கடி சிறுமியை கரண்டியால் அடித்துள்ளார். இதை, அருகில் வசிப்பவர்கள் உறுதி செய்தனர். பிரேத பரிசோதனையில், சிறுமியின் உடலில் பல இடங்களில், தசை கன்றி போய் இருந்தது தெரிந்தது.
‘தொடர்ந்து அடித்து வந்ததால், சிறுமிக்கு உள்காயம் ஏற்பட்டு, உடலின் பல்வேறு பகுதிகளில் தசை சிதைந்துள்ளது. இதனால் ரத்தம் கசிந்து, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
0
0