பட்டாசுகள் வெடித்து தரைமட்டமான வீடுகள்.. 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு ; சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்ட விற்பனை!!

Author: Babu Lakshmanan
31 December 2022, 11:43 am

நாமக்கல் அருகே வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் உரிமையாளர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் தில்லை குமார். பட்டாசு விற்பனை செய்ய அனுமதி பெற்ற இவர், மோகன் அருகே குமரிபாளையத்தில் குடோன் வைத்துள்ளார். இந்த நிலையில், இன்று புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பட்டாசு விற்பனை செய்யும் வகையில், அதிகளவு பட்டாசை நேற்று வீட்டில் எடுத்து வந்து வைத்திருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் விபத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறியதில், வீட்டில் இருந்த சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வெடித்தது. இதில், தில்லை குமார் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டம் ஆனது.

மேலும் அருகில் இருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளும் இடிந்து சேதம் அடைந்தன. விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த தில்லைக்குமார் தூக்கி வீசப்பட்டு உயிர் இழந்த நிலையில், அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த பெரியக்காள் என்பவரும் உடல் சிதறி உயிரிழந்தார். மேலும் அருகில் இருந்த வீடுகளில் வசித்து வந்த 11 பேர் காயமடைந்து நாமக்கல் மற்றும் மோகனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு நாமக்கல், கரூர் மோகனூர் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. சம்பவம் அதிகாலை நடைபெற்றது என்பதால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தீயணைக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கு யாராவது சிக்கி உள்ளார்களா? சேதம் குறித்து வருவாய், காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பட்டாசு குடோனுக்கு வேறு இடத்தில் அனுமதி பெற்று வீட்டில் பட்டாசுகளை அதிகளவு பதுக்கி வைத்திருந்ததில் விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

  • Family Man 3 Actor Rohit Basfore Found Dead Near Guwahati Waterfall நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!