செய்தியாளரை கட்டி வைத்து திமுகவினர் தாக்குதல்… திமுக மேற்கு மாவட்ட நிர்வாகி கைது.. மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு

Author: Babu Lakshmanan
1 March 2024, 10:42 am

போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அவர்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை கடத்தி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், அவர் தலைமறைவாகினார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நுங்கம்பாக்கத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் செந்தில் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவினரின் இந்த செயலுக்கு பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் உள்பட, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் செந்தில் மீது திமுகவினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக திமுக மேற்கு மாவட்ட நிர்வாகி கலைச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சிலரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!