வேறு வழியில்லாமல் சசிகலா பக்கம் சாயும் ஓபிஎஸ்…? தஞ்சையில் நடந்த முதல் மீட்டிங்.. சுதாரிக்கும் இபிஎஸ் தரப்பு..!!
Author: Babu Lakshmanan9 September 2022, 1:14 pm
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. கடந்த ஜுலை 11ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதேவேளையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியும் அதிரடி காட்டினார்.
அதுமட்டுமில்லாமல், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவான தனிநீதிபதியின் தீர்ப்புக்கும், நீதிமன்றத்தின் மூலம் தடை வாங்கி, அதிமுகவை முழுமையாக கைப்பற்றி விட்டார் எடப்பாடி பழனிசாமி. மேலும், 2 மாதங்களுக்கு பிறகு நேற்றைய தினம் அதிமுக அலுவலகம் சென்று, கட்சிப் பணிகளையும் தொடங்கி விட்டார்.
இதனால், கலக்கமடைந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு, அதிமுக அலுவலகம் செல்ல போலீஸ் அனுமதி மறுத்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க மறைமுக திமுகவின் ஆதரவும், சசிகலாவின் ஆதரவையும் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுவருவதாக எதிர்தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். அதேவேளையில், சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இணைத்துக் கொள்ள ஏற்கனவே ஓபிஎஸ் க்ரீன் சிக்னல் காட்டி விட்டார். இதனால், எந்த நேரமும் அவர்கள் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தஞ்சாவூரில் ஒரத்தநாடு காவரப்பட்டு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா உடன் அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம் சந்திப்பு சசிகலாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். சசிகலாவுக்கு இனிப்பு வழங்கினார் வைத்திலிங்கம். சசிகலாவுடன் ஓ.பன்னீர் செல்வம் அணியின் முதல் சந்திப்பு இது தான். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் பேசி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. எனவே, விரைவில் அவர்கள் இணைவது உறுதியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
அதேவேளையில், ஓபிஎஸ், சசிகலா இணைந்தாலும் அவர்களை சமாளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.