விஜயகாந்த் குறித்து பேசிய அதிமுக வேட்பாளர்… மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத பிரேமலதா!!
Author: Babu Lakshmanan1 April 2024, 12:51 pm
வாணாபுரத்தில் அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு வாக்கு சேகரித்த போது, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அக்கட்சி தொண்டர்களின் நெஞ்சை உருகச் செய்தது.
தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு வாக்கு சேகரிக்கும் விதமாக கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாணாபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.
மேடையில் பேசிய அதிமுக வேட்பாளர் குமரகுரு, தேமுதிக பற்றியும், விஜயகாந்த் பற்றியும் பேசும் போது நா தழுதழுத்து பேசினார். அதேபோல், அவர் பேசியதை மேடையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கண்ணீர் விட்டு அழுதார்.
அதேபோல வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து பேசும்போது, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் குறித்தும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி குறித்தும் பேசுகையில் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் தொண்டர்களிடம் நமது கூட்டணி கட்சியின் அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு வாக்களிக்க வேண்டும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த கூட்டத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட தேமுதிக அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இத்தனை பேர் கூடிய கூட்டத்திற்கு வெறும் 100 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது என்பதை குறிப்பிடத்தக்கது.