கடற்கரையில் மீன் விற்கக்கூடாதாமா.. ஆனா இத்துப்போன பேனா சிலையை வைப்பாங்களாம் : ஆவேசத்துடன் பேசிய சீமான்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2023, 6:17 pm

சமாதியை கட்டுகிற வேகத்தை அரசு மீன்சந்தை கட்டியதில் ஏன் காட்டவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக மீன் கடைகள் ஆக்கிரமித்து உள்ளதாகவும், ஐஸ் பெட்டிகள், மீன் வாங்குவோரின் வாகனங்கள் சாலை ஓரம் நிறுத்தப்படுவதாகவும் கூறி சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்த பொதுநல வழக்கில், கடைகளை அகற்ற உத்திரவு பிறப்பித்தனர்.

இதையடுத்து சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையின் மேற்கு பகுதியில் உள்ள கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், மீனவர்கள் சாலையில் கட்டிடம் கட்டவில்லை. தகரம் கூட வைக்கவில்லை.

ஒரு குடையின் கீழ் மீனை வைத்துக்கொண்டு விற்கின்றனர். கடற்கரையில் மீன் விற்கக் கூடாது; ஆனால் கடலை சீரழிக்கும் இத்து போன பேனா சிலையை வைக்கலாமா? என கேட்டால் உங்களிடம் பதில் உள்ளதா? கடற்கரையில் மீன் விற்கக்கூடாது என சொன்ன நீதிமன்றம், தலைவர்களின் சமாதியை வைக்கலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

சமாதியை கட்டுகிற வேகத்தை அரசு மீன்சந்தை கட்டியதில் ஏன் காட்டவில்லை? என்று கேள்வி எழுப்பினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசும்போது, யூடியூப் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஏய், ஓய்,போடா என ஒருமையில் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்