ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு பின்னணியில் சதி ; போட்டுத்தாக்கிய ஆளுநர் ஆர்என் ரவி… உடனே ரியாக்ஷன் கொடுத்த கனிமொழி..!!
Author: Babu Lakshmanan6 April 2023, 5:56 pm
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும், திமுக எம்பி கனிமொழிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் ஆளுநர் ஆர்என் ரவி கலந்துரையாடிய, ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சி ராஜ்பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று கலந்துரையாடினர்.

அப்போது, மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது :- வெளிநாடுகளில் இருந்து வரும் பல நிதிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்று நாட்டின் வளர்ச்சியை தடுக்கவும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவும் கொண்டுவரப்படும் நிதியை கட்டுப்படுத்த மத்திய அரசு எப்.சி.ஐ முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதிகள் போராட்டங்கள் செய்யவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வரையில் வெளிநாட்டு நிதிகள் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, கேரளாவில் விளிஞ்சம் துறைமுகம் அமைக்கும் போது, மக்களை போராட்டம் நடத்த நிதி பயன்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்றமும், வல்லுநர்களும் எவ்வளவு சொல்லியும், மக்களை அதனை ஏற்கவில்லை. இது மாதிரி தான், கூடங்குளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் வருத்தமானது.
ஆனால் அந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் நாட்டின் மொத்த காப்பர் உற்பத்தியில் 40 சதவீதம் அளவுக்கு பூர்த்தி செய்யப்பட்டு வந்தது எவ்வளவு முக்கியத்துவமானது என்று தெரியும், எனக் கூறியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சுக்கு திமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அந்த வகையில், ஆளுநரின் இந்தப் பேச்சை குறிப்பிட்டு டுவிட் செய்த திமுக எம்பி கனிமொழி, ஆதாரம் இருந்தால் தாருங்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.