‘2-3 வருஷமா உள்ளே நிறைய பேரு இருக்காங்க.. அது தெரியுமா..?’ ஜாமீன் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!!

Author: Babu Lakshmanan
15 May 2024, 2:18 pm

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கிடையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது பதில் மனு தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க: பைத்தியக்காரத்தனமா இல்ல… இதைப் பார்த்து சிரிப்பதா…? அழுவதா…? திமுக அரசு மீது ஆர்பி உதயகுமார் ஆவேசம்..!!

அதில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்.எல்.ஏ. பொறுப்பில் உள்ளதால் வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது. விசாரணையின்போது செந்தில்பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை. செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லை. அதனால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்,” என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது.

ஆனால், அமலாக்கத்துறையினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை களைக்க நேரிடும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ஏற்கனவே 2-3 வருடங்கள் பிணை இல்லாமல் கைதிகளாக இருப்பவர்கள் உள்ளனர். வழக்கு விசாரணைக்கு வராமல் சிறையில் இருக்கும் பலர் உள்ளனர். எனவே இடைக்கால ஜாமீன் பற்றி உடனே முடிவு எடுக்க முடியாது. நாளை வழக்கு விசாரிக்கப்படும், என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

  • five star creations report against dhanush viral on internet தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…