காரில் வந்த ஹெச் ராஜாவை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார் : பரபரப்பு புகார்!!
Author: Udayachandran RadhaKrishnan14 March 2023, 7:22 pm
இன்று மாலை திண்டிவனத்தில் நடைபெறுகிற பாஜகவின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் பிரமுகர் ஹெச். ராஜா காரைக்குடியிலிருந்து வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது கடலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே கடலூர் மாவட்ட போலீசாரும் பெரம்பலூர் மாவட்ட போலீசாரும் அவரின் காரை தடுத்து நிறுத்தினர்.
திண்டிவனத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு அனுமதி வாங்கவில்லை எனவே அங்கு சென்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனத் தெரிவித்தனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெச்.ராஜாவை கைது செய்த போலீசார் அவருடன் வந்த 500க்கும் மேற்பட்ட பாஜகவினரையும் கைது செய்தனர்.
அனைவரும் ராமநத்தம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக அங்கு வந்த ஹெச்.ராஜாவிற்கு விசிகவினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.