திமுகவை விமர்சிப்பதாலேயே என் மீது திட்டமிட்டு வழக்கு… பழிவாங்கத் துடிக்கும் காவல்துறை : திருச்சி சூர்யாசிவா பகீர் குற்றச்சாட்டு..!!
Author: Babu Lakshmanan16 November 2022, 6:22 pm
திருச்சி : ஆளும் கட்சியான திமுகவை நான் தொடர்ந்து விமர்சிப்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக என் மீது திட்டமிட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக பாஜக ஓ.பி.சி பிரிவு மாநில செயலாளர் சூர்யா சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கு திருச்சி சண்முகா நகர் 3வது குறுக்கு சாலையில் சொந்தமாக ஏபிசி மாண்டேசரி பள்ளி மற்றும் வீடு இணைந்து உள்ளது.
இந்த வளாகத்தை கடந்த ஒரு வருட காலமாக காலி செய்ய மறுப்பு தெரிவித்தும், 6 மாத வாடகையும் தராமல், பாஜகவின் ஓபிசி அணியின் மாநில செயலாளர் சூரிய சிவா மற்றும் அவரது மனைவி அத்தினா கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கடந்த 2ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்திருந்தனர்.
அதனையொட்டி, இன்று பாஜகவின் ஓபிசி அணியின் மாநில செயலாளர் சூர்யா சிவா மற்றும் அவரது மனைவி அத்தினா ஆகிய இருவரும் திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிசி அணியின் மாநில செயலாளர் சூரர்யா சிவா, மனைவி அத்தினா கூறியதாவது :- காவல்துறைக்கு என் மீது எப்படியாவது வழக்கு தொடர வேண்டும் என்ற நோக்கில் யார் புகார் கொடுத்தாலும், உடனடியாக அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பது போல் வழக்கு என் மீது ஜோடிக்கப்பட்டு வருகிறது.
அதற்கு முக்கிய காரணம் ஆளும் கட்சியாகிய திமுகவை நான் தொடர்ந்து விமர்சிப்பதால், என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு, காவல்துறை செயல்படுவதாகவும், இந்த பள்ளி வளாக கட்டிடம் தொடர்பான புகாரிலும், இதே போன்று என் மீது காவல்துறை திட்டமிட்டு வழக்கு பதிவு செய்துள்ளது, எனக் குறிப்பிட்டுள்ளார்.