விரைவில் அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்…? எப்போது என்பதை சூசகமாக போட்டுடைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்…!!
Author: Babu Lakshmanan26 May 2022, 4:22 pm
சென்னை : சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராவார் என்பதை அமைச்சர் தா.மோ. அன்பரசன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
சென்னை – சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கொய்யாத் தோப்பு பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகளில் வசித்து வரும் மக்களை அத்தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினார்.
அப்போது, அமைச்சர் தா.மோ. அன்பரசன், விரைவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார் என்பதை சூசகமாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- கொய்யாத் தோப்பில் மட்டும் ரூ.52 கோடியே 20 லட்சம் மதிப்பில் 358 வீடுகள், 46 குடியிருப்புகள் வெறும் 18 மாதங்களில் கட்டித் தரப்படும். தற்போது நாம் செய்யும் பணிகளை பார்த்து அதிமுக உள்ளிட்ட கட்சியினர் பொய்யான தகவலை பரப்புகின்றனர்.
கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சொன்னதை செய்பவர்கள். ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லிவிட்டார். எங்கு வீடுகள் இடிக்கப்படுகிறதோ, அவர்களுக்கு அதே பகுதியில் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இப்ப காலி செய்தால், 19வது மாதத்தில் உங்களுக்கான வீடுகளை எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக வந்து உங்களிடம் வழங்குவார், எனக் கூறினார்.
அமைச்சரின் இந்தப் பேச்சின் மூலம் திமுகவின் 2வது ஆண்டு ஆட்சி நிறைவடைவதற்குள் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார் என்பது உறுதியாகியுள்ளது.