கனடா நாட்டுல வேலை: கை நிறைய சம்பளம்:200 கோடி அபேஸ் செய்த கில்லாடி கும்பல்;கிடுக்கிப்பிடி போட்ட போலீஸ்….!!

Author: Sudha
4 August 2024, 1:55 pm

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, நாடு முழுதும், 3,400 பேரிடம் ஏமாற்றி, 200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த, கர்நாடகா, தமிழகம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டில்லி, அசாம் உள்ளிட்ட 9 மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த மோசடி கும்பலை, போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருந்தார். ஷார்ப்ஜாப்ஸ் (Sharpjobz) என்ற பேஸ்புக் பக்கத்தில் வந்த விளம்பரத்தை நம்பி மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது, தனியார் ஏஜென்சி அதிகாரி என, தன்னை அறிமுகப்படுத்தி பேசிய நபர், கனடாவில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார்.

விசா, மருத்துவப் பரிசோதனை, இன்சூரன்ஸ் எடுப்பதற்கு பணம் டிபாசிட் செய்ய கூறியுள்ளார். நம்பிய சுரேஷ்குமார், அந்நபர் கூறிய வங்கி கணக்கில், 17.71 லட்சம் ரூபாயை டிபாசிட் செய்தார். வேலை வாங்கி தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ்குமார், மார்ச் 22ல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இரு மாதங்களாக சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், ஏமாற்றிய கும்பல் பெங்களூரில் தங்கியிருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் மோசடி கும்பல் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து, அவர்களை கைது செய்தனர். அவர்கள், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுபம் ஷர்மா பீஹாரைச் சேர்ந்த தீபக்குமார், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்கவுண்ட், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நீரஜ் குர்ஜார் எனவும்,உத்தரபிரதேசத்தை சேர்ந்த அசம்கான் தலைமையில் நால்வரும் தனிக்குழுக்களாக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

கைதாகியுள்ள நால்வரும், யாரை ஏமாற்ற வேண்டும்; எவ்வளவு பணம் ஏமாற்ற வேண்டும்; எந்த வங்கி கணக்கிற்கு பணம் பெற வேண்டும் என திட்டமிட்டு, அட்டவணை தயார் செய்து பல ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளனர். இவ்வாறு மோசடி செய்து அசம்கானிடம் அளிக்கும் பணத்தில், 50 சதவீதம் கமிஷன் பணம் மட்டும் நால்வரும் பெற்று வந்துள்ளனர். இந்த பணத்தின் வாயிலாக 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார், 1.16 கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை பதிவு செய்து முன் பணமாக, 12 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரிடம் இருந்து, 21 மொபைல் போன்கள், இரு பாஸ்போர்ட், 42 சிம்கார்டு, 1 லேப்டாப், 64 ATM கார்டுகள், 41 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நால்வரும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!