திமுக பற்றி பெரியார் பேசிய கருத்துக்களை தமிழக பேரவையில் பேச திமுக அரசு அனுமதிக்குமா? வானதி சீனிவாசன் அதிரடி கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2023, 1:21 pm

திமுக பற்றி பெரியார் பேசிய கருத்துக்களை தமிழக பேரவையில் பேச திமுக அரசு அனுமதிக்குமா என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து த்னது X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசத்தை துண்டாட நினைப்பவர்களை பாஜக அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.

பிரிவினைவாதம் பேசுவதுதான் கருத்துரிமையா? திமுக பற்றி பெரியார் ஈ.வெ.ரா. பேசிய கருத்துக்களை தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேச திமுக அரசு அனுமதிக்குமா?

“மாநிலங்களவையில் திமுக எம்.பி. அப்துல்லா, உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது! மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் – எப்போதும் – எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம்! அனைவரும் பயன்படுத்துங்கள்!” என, திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

மாநிலங்களவையில் திமுக எம்.பி. அப்துல்லாவின் பேச்சு முழுக்க, முழுக்க உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. அப்பட்டமாக பிரிவினையை ஆதரித்துப் பேசியிருக்கிறார். தேசத்தை துண்டாட வேண்டும் என்று வெவ்வேறு வார்த்தைகளில் அப்துல்லா பேசியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான திரு. ஜெகதீப் தங்கர், “உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகப் பேசுகிறீர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவையை தவறாகப் பயன்படுத்துகிறீர்கள்” எனக்கூறி அப்துல்லா பேசிய தேசவிரோதக் கருத்துக்களை நீக்கியிருக்கிறார்.

பாரதம் சுதந்திரம் அடைந்த நாளை கருப்பு தினமாக அறிவித்த பெரியார் ஈ.வெ.ரா.வின் வழிவந்தவர்கள் அவரின் பிரிவினைவாத கருத்துக்களை ஆதரிப்பதில் ஆச்சரியம் இல்லை. அதனால்தான், அப்துல்லாவின் பிரிவினைவாத நச்சுக் கருத்துக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வக்காலத்து வாங்கியிருக்கிறார்.

பாரதம் ஒரே நாடு. பாரத குடிமக்கள் அனைவரும் சமம். எவரும் உயர்ந்தவர்களும் இல்லை. தாழ்ந்தவர்களும் இல்லை என்பதுதான் பாஜகவின் கொள்கை. இனத்தின் பெயரால், மொழியின் பெயரால் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, இந்து மதத்தை தூற்றி, சிறுபான்மை மதத்தினரின் ஆதரவைப் பெற்று குடும்ப, ஊழல் ஆட்சி நடத்தி வரும் கட்சி திமுக.

மாநிலங்களவையில் திமுக எம்.பி. அப்துல்லா மேற்கோள் காட்டிய பெரியார் ஈ.வெ.ரா.வின் பிரிவினை கருத்துகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதை, ‘கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது’ என முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விமர்சித்துள்ளார். திமுக அரசை விமர்சிப்பவர்களை எல்லாம் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்து சிறையில் அடைத்து வரும் திமுகவினர் கருத்துரிமை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திமுகவை துவங்கிய பிறகு திமுகவைப் பற்றி பெரியார் ஈ.வெ.ரா. பேசியவை திராவிடர் கழகம் நடத்திய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. அவற்றை தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேச நான் பேச நான் தயாராக இருக்கிறேன். அதை அனுமதிக்க, அவைக் குறிப்பில் இடம்பெற அனுமதிப்பீர்களா என்று சவால் விடுக்கிறேன்.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, தனிக்கட்சி தொடங்கியபோது, ‘திராவிடர்” என்பதற்குப் பதிலாக ‘திராவிட’ என்ற சொல்லைப் பயன்படுத்தி கட்சிக்கு, ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என பெயரிட்டார்கள். அரசியல் ஆதாயத்திற்காக பெரியார் ஈ.வெ.ராவின் கொள்கையை குப்பைத் தொட்டியில் வீசியவர்கள் இன்று அவருக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.

திமுக என்பது மதம் மாற்ற வந்த பாதிரியார் ராபர்ட் கால்டுவெல்லின் கற்பனையில் உருவான ‘திராவிட – ஆரிய இனவாத’ கொள்கையின் படி உருவான பிரிவினைவாத கட்சி. வெளிப்படையாக பிரிவினைவாதம் பேசினால் கட்சி நடத்த முடியாது, ஆட்சி அதிகாரத்தில் இருந்து, ஊழல் செய்து, குடும்பத்தை வளப்படுத்த முடியாது என்பதால், மறைமுகமாக வெவ்வேறு அலங்கார வார்த்தைகளில், கருத்துரிமை, ஜனநாயகம், சிறுபான்மையினர் உரிமை என்ற பெயரில் பிரிவினைவாதம் பேசி வருகின்றனர்.

தமிழ்நாடு மக்கள் உள்பட பாரத நாட்டு மக்கள் அனைவரும் பிரிவினைவாதத்தை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். தேசம் இல்லாவிட்டால் எதுவும் இல்லை. மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. பாரத தேசம் இப்போது தேசத்தின் மீது தீராப் பற்று கொண்டவர்களின் கரங்களில் பாதுகாப்பாக உள்ளது. இதை மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும், திமுக எம்.பி. அப்துல்லாவுக்கு கொடுத்த பதிலடியில் இருந்து அனைவரும் உணர்ந்திருப்பார்கள்

மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அவர்கள் கூறியது போல, திமுக எம்.பி.யின் பிரிபினைவாத கருத்துக்களை, அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் ஏற்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் அப்துல்லாவின் பேச்சுக்கு குறைந்தபட்சம் கண்டனமாவது தெரிவிக்க வேண்டும். தேசத்தை துண்டாட நினைப்பவர்களை பாஜக அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என குறிப்பிட்டுள்ளார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!