எலான் மஸ்க் வசமாகிறது ட்விட்டர் நிறுவனம்? அடேங்கப்பா…இத்தனை கோடி கொடுத்து வாங்கப்போறாரா?
Author: Udayachandran RadhaKrishnan14 April 2022, 7:32 pm
உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க தயார் என அறிவித்துள்ளார்.
டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இடம் பெற மறுத்த சில நாட்களுக்குப் பிறகு, எலான் மஸ்க் ட்விட்டரை சுமார் 43 பில்லியன் டாலர்களுக்கு வாங்க முன்வந்துள்ளார்.
ட்விட்டர் நிர்வாக குழுவில் இடம் பெற மறுத்ததற்கு பின் பல காரணங்கள் சொல்லபப்ட்டு வந்த நிலையில் தற்போது ட்விட்டரை மொத்தமாகக் கைப்பற்ற முடிவு செய்து, அதிரடி அறிவிப்பு ஒன்றை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.
எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை $54.20 என்ற விலை வாங்க முன்வந்துள்ளார். டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கிய நிலையில், தற்போது 43 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் மொத்த நிறுவனத்தையும் வாங்க முன் வருவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பின் படி ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளையும் 4,100 கோடிக்கு வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக குழு தலைவர் பிரெட் டெய்லருக்கு எலான் மஸ்க் கடிதம் எழுதியுள்ளார், அதில் “உலகளவில் சுதந்திரமான பேச்சுக்கான தளமாக ட்விட்டர் இருக்கும் என நம்பிக்கையின் அடிப்படையில் தான் அதில் முதலீடு செய்தேன்.
ஆனால், அதன் தற்போதைய வடிவத்தில் பேச்சு சுதந்திரத்தை முழுமையாக வழங்கும் நோக்கம் நிறைவேறாது என்பதை நான் இப்போது உணர்கிறேன். ட்விட்டரை ஒரு தனியார் நிறுவனமாக மாற்ற வேண்டும்” என்று மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.