சொந்த நாட்டிற்கு திரும்பும் உக்ரைன் மக்கள்: அகதிகளாக சென்றவர்கள் நாடு திரும்பும் நெகிழ்ச்சி..புத்துயிர் பெறும் தலைநகர் கீவ்..!!

Author: Rajesh
8 April 2022, 12:57 pm

கீவ்: உக்ரைன் தலைநகரில் இருந்து ரஷ்ய படைகள் விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து சொந்த நாட்டிற்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.

உக்‍ரைன் தலைநகர் கிவிலிருந்து ரஷ்ய ராணுவம் விலக்‍கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து பொதுமக்‍களின் நடமாட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. உக்‍ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி போர் தொடுத்த ரஷ்யா தொடர்ந்து தாக்‍குதல் நடத்தி வருகிறது.

அந்நாட்டின் தலைநகர் கிவ், கார்கிவ், லிவிவ் போன்ற நகரங்களில் ரஷ்ய ராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்‍குதல் நடத்தியதால் ஏராளமான பொதுமக்‍கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்‍குதலை தொடங்கி 40 நாட்களை கடந்துவிட்ட போதும், சண்டையை நிறுத்த இரு நாடுகள் இடையே எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. மேலும், ரஷ்யாவுக்‍கு எதிராக உக்‍ரைனும் தீவிரமாக போரிட்டு வருகிறது. இந்த போரில், உக்‍ரைனுக்‍கு ஆதரவாக அமெரிக்‍கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் செயல்பட்டு வருகின்றன.

உக்‍ரைனுக்‍கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தற்போது கிவ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷ்ய ராணுவம் விலக்‍கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே வெளியேறிய பொதுமக்‍கள் மீண்டும் சொந்த ஊர்களுக்‍கு திரும்பி வருகின்றனர். இதனால் இந்நகரங்களில் முடங்கி கிடந்த பொதுமக்‍களின் நடமாட்டம் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதனிடையே ஐ.நா. உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டது சட்டவிரோதமானது என அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது. உறுப்பு நாட்டைத் தண்டிக்கும் நோக்கில் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை இது எனவும் தெரிவித்துள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ